கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு கட்சி அலுவலகங்களில் தவறாக திருமணங்கள் நடத்தப்பட்டு வருவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி ஒரு இளம்பெண்ணின் தந்தை தன்னுடைய மகள் மாயமாகிவிட்டதாகவும், அவளை மீட்டுத்தர வேண்டும் எனவும் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாயமான அந்த பெண்ணை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
போலீசார் மாயமான அந்த பெண்ணை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், அந்த பெண்ணுக்கு குட்டநாடு பகுதியிலுள்ள நெடுமுடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து பிப்ரவரி 19-ம்தேதி திருமணமாகிவிட்ட தகவலையும் வாக்குமூலமாக அளித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்தோணி டொமினிக் மற்றும் அனில்.கே. நரேந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த திருமணம் தவறானது என்றும், சட்டப்படி திருமண அதிகாரி முன்னிலையிலோ அல்லது மதச் சடங்குகளின்படியோ திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும். மாறாக கட்சி அலுவலகத்தில் நடந்த திருமணங்களை கேரள திருமணப் பதிவுச் சட்டவிதிகள் 2008-ன் கீழ் திருமணமாக பதிவு செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், இதுபோன்ற திருமணங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment