Sunday, 13 October 2013

பாலம் இடிந்ததாக வதந்தி: நெரிசலில் சிக்கி 109 பேர் பலி



டாடியா:ம.பி., மாநிலத்தில், ரத்னாகர் துர்கா கோவிலில், நவராத்திரி விழாவை யொட்டி, நேற்று நடந்த வழிபாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 109பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



டாடியா மாவட்டத்தில், ரத்னாகர் என்ற இடத்தில், துர்கா கோவில் உள்ளது. இங்கு, நவராத்திரி விழாவையொட்டி, நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வழிபாட்டிற்கு, ம.பி.,யில் இருந்து மட்டுமல்லாது, உ.பி., மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால், பலர் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றனர். கோவிலை யொட்டி ஓடும், சிந்து நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலத்தில், வரிசையாக பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது, பாலம் இடிந்து விட்டதாக, யாரோ சிலர் வதந்தியை கிளப்பியுள்ளனர்.

இதை அறிந்த, வரிசையில் சென்ற பக்தர்கள், திடீரென கலைந்து ஓடினர். ஒருவரோடு, ஒருவர் முட்டி மோதினர். குறுகிய பாலத்தில், பலரும் முண்டியடித்து கொண்டு ஓடியுள்ளனர். இதில்,கூட்ட நெரிசலில் சிக்கி, 109 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர், பாலத்தில் இருந்து, ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தேடும் பணியில் தோல்வி ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பக்தர்கள், போலீசார் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து,போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைந்து போகும்படி செய்தனர். இந்த சம்பவத்தில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment