Tuesday, 28 May 2013

2 ஆவது மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன்





தஞ்சை மாவட்டத்தில் முதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்து, ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் இருந்து வெளிவந்த நபர் 2 ஆவது மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன் தப்பியோட்டம்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்துள்ள 34 கோவிலூர் இலுப்பை தோப்பையை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது46). கூலி தொழிலாளி. இவருடைய முதல் மனைவி பாப்பா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

பாப்பாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ரெங்கசாமி கடந்த 1999ம் ஆண்டு அவரை கொலை செய்துவிட்டார். இந்த கொலை வழக்கில் கைதான ரெங்கசாமி சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் பத்மினி(37) என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 

இதற்கிடையில் முதல் மனைவி பாப்பாவை கொலை செய்த வழக்கில் ரெங்கசாமிக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதனால் சிறையில் இருந்த ரெங்கசாமி தண்டனை காலம் முடிந்து கடந்த 7 மாதத்திற்கு முன்னர் தான் வெளியே வந்தார். 

இதனை தொடர்ந்து ரெங்கசாமி பத்மினியுடன் வசித்து வந்தார். அப்போது பத்மினியின் நடத்தையில் ரெங்கசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் ரெங்கசாமி மனைவி பத்மினியை பக்கத்து ஊராகிய பருத்திக்கோட்டை நெல்லுக்கடை பகுதியிலுள்ள தனது தங்கை சாந்தி வீட்டிற்கு அழைத்து சென்றார். 

அங்கு ரெங்கசாமியும், பத்மினியும் தங்கிருந்து விவசாய வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று சாந்தியும், அவரது கணவர் கண்ணனும் வெளியூருக்கு சென்றுவிட்டனர். இதனால் ரெங்கசாமியும் அவரது மனைவி பத்மினியும் வீட்டில் தனியாக இருந்தனர். 

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் பத்மினி கழுத்தின் பின்புறம் மண்வெட்டியால் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மண்வெட்டியும் கிடந்தது. 

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரத்தநாடு காவல்துறையினர் பத்மினி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி பத்மினியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ரெங்கசாமி அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகிவிட்ட ரெங்கசாமியை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment