இணையத்தில் பரவிக் கிடக்கும் ஆபாசத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பள்ளிக்கூட பாலியல் கல்வி திணறுகிறது என பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
பாலியல் கல்வியும் உறவுகள் பற்றிய கல்வியும் பள்ளிகூடத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்த ஆய்வை உருவாக்கியவர்கள் வாதிடுகின்றனர்.
ஆபாசப் படங்களின் தாக்கம் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
உறவுகள் பற்றிய பாடங்கள் ஆரம்பப் பள்ளியிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் பள்ளிப் பிள்ளைகள் நல ஆணையத்தின் துணை ஆணையர் சூ பெர்லோவிட்ஸ் கூறுகிறார்.
இணையத்திலுள்ள தவறான விஷயங்களை பிள்ளைகள் தவிர்த்துக்கொள்வதற்கு இவ்விதமான சீர்திருத்தங்கள் அவசியம் என அரசாங்கம் தெரிவிக்கிறது.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளே இணையத்தில் பரவிக் கிடக்கும் ஆபாசப் படங்களுக்கு அறிமுகமாகிவிடுகின்றனர் என்றும், பிள்ளைகளின் வயது அதிகரிக்க இந்த ஆபத்து அதிகரிக்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
சிறார்களிலும் இளம் பிராயத்தினரிலும் இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஒரு கைத்தொலைபேசியிலோ டாப்லட் கணினியிலோ, இரண்டு தடவை சொடுக்கினாலே, வன்மம் மிக்க மற்றும் மோசமான பாலியல் காட்சிகள் அவர்கள் கண்ணில் படுவதற்கான நிஜமான ஆபத்து இருக்கிறது என்று பெர்லோவிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
பாலியல் ஆபாசப் படங்களை பிள்ளைகள் காண நேர்ந்தால் அவர்களது மனோநிலையும் குணாம்சங்களும் நடவடிக்கைகளும் ஆரோக்கியமற்ற வகையில் மாறலாம் என இந்த அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment