Friday, 16 August 2013

போதி கயா ஆலய குண்டு வெடிப்பு: பூசாரி கைது

போதி கயா ஆலய குண்டு வெடிப்பு: தலைமறைவாக இருந்த பூசாரி போலீசில் சிக்கினார் - தீவிர விசாரணை

பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகா போதி கோவிலில் ஜூலை 7ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர். 

நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்ட 9 குண்டுகளும் சக்தி குறைந்தவை என்பதால், கோவிலுக்கு பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. 9 குண்டுகளும் வெடித்த இடங்களில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். 

அப்போது "டைம் பாம்" வகையைச் சேர்ந்த அந்த வெடி குண்டுகள் சிலிண்டருடன் இணைத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. 

மத்திய உளவுத்துறை கடந்த ஆண்டில் இருந்தே மகாபோதி கோவிலுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதை கூறி எச்சரித்தது. கடந்த மாதமும் உளவுத்துறை பீகார் அரசை உஷார்படுத்தியது. 

ஆனால் பீகார் மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் தீவிரவாதிகள் கைவரிசை காட்டி விட்டனர். 

குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் இந்தியன் முஜாகிதீன்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை குழுவினர் கருதினர். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கருதப்படுகிறது. 

குற்றவாளிகளை கண்டு பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பும், தேசிய பாதுகாப்புப் படையினரும் விசாரணையை தொடங்கினர். குண்டு வெடிப்பு தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்ததாக மிஸ்திரி என்ற தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

அதுபோல கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளில் இருந்தும் துப்பு துலக்க இயலவில்லை. 

இந்த நிலையில் 5 மர்ம நபர்கள் புத்தர் கோவிலுக்குள் சென்று குண்டுகளை வைத்திருக்கலாம் என்று கருதிய தேசிய புலனாய்வு பிரிவினர் அவர்களில் 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். 

இவர்களில் ஒருவனான பூசாரி அருப் பிரம்மச்சாரி என்பவனை தேசிய புலனாய்வு போலீசார் நேற்று கைது செய்தனர். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவன் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது கோவிலில் தங்கி இருந்தான். 

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாகி விட்ட இவனை சுமார் ஒரு மாத கால தேடலுக்கு பிறகு கைது செய்த போலீசார் ராம்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

இந்த விசாரணையில் குண்டு வெடிப்பு தொடர்பான உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment