Monday, 5 August 2013

முஸ்லிம் என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவி

மாமா பயங்கரவாதி என்பதால் பாஸ்போர்ட் வழங்க மறுப்பு: அமெரிக்காவில் இலவசமாக படிக்கும் வாய்ப்பை இழந்த 15 வயது மாணவி
காஷ்மீரின் பட்காம் பகுதியில் உள்ள அனாதை விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி சுஃபைரா ஜான் (15).

இந்தியா-அமெரிக்கா இளைஞர் கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் படிக்க விரும்பிய இவர் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற 4 தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றார்.

இதனையடுத்து, அமெரிக்காவில் ஓராண்டு தங்கி இலவசமாக படிப்பதற்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அவருக்கு விசா வழங்கியது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திற்குள் அமெரிக்காவில் உள்ள பள்ளியில் சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஸ்போர்ட் பெறுவதற்காக சுஃபைரா ஜான் விண்ணப்பித்தார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சுஃபைரா ஜானின் மாமா ஒருவர் இதற்கு முன்னர் பயங்கரவாதியாக இருந்துள்ளார். பின்னர், 1995ம் ஆண்டு போலீசாரிடம் சரணடைந்த அவர், பொது மன்னிப்பு பெற்று தற்போது இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இதனை மேற்கோள் காட்டிய காஷ்மீர் மாநில சி.ஐ.டி. துறையினர் பயங்கரவாதியின் உறவினர் என்பதால் சுஃபைரா ஜானுக்கு பாஸ்போர்ட் வழங்க கூடாது என்று மாநில அரசுக்கு தெரிவித்தது.

இதனையடுத்து, பாஸ்போர்ட் கிடைக்காததால் இலவசமாக அமெரிக்கா சென்று படிக்கும் அரிய வாய்ப்பை அந்த ஏழை இளம்பெண் இழந்து விட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கஷ்டப்பட்டு படித்து எல்லா தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றேன்.

நான் பிறப்பதற்கு முன்னர் எனது மாமா பயங்கரவாதியாக இருந்தார் என்பதற்காக எனக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? நான் செய்த தவறு என்ன? எந்த பயங்கரவாத செயல்களிலும் நான் ஈடுபடவில்லையே... இதை ஏன் அரசு அதிகாரிகள் உணர்ந்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை' என்று கண்ணீர் மல்க கூறினார்.

No comments:

Post a Comment