Tuesday, 18 June 2013

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தினால் உறவில் விரிசல் ஏற்படலாம்-ஆய்வு,



வாஷிங்டன் : இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிகம் நேரம் செலவிட்டால், அவர்களுக்கிடையே சண்டை, நம்பிக்கையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, அது விவகாரத்து வரை கொண்டு செல்லும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிசௌரி பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் பயிலும் ஆய்வு மாணவர் ரஸ்ஸல் கிளேட்டனும், ஹவாய் மற்றும் செயின்ட் மேரீஸ் பல்கலைகழக மாணவர்களும் சேர்ந்து ஆய்வு நடத்தினர். பேஸ்புக் பயன்படுத்தும் 18 முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எத்தனை நாளைக்கு ஒரு முறை பேஸ்புக்கை பயன்படுத்துவீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்கள், பேஸ்புக்கை பயன்படுத்துவதால் தற்போதைய துணையோடு அல்லது முந்தைய துணையோடு என்னென்ன பிரச்னைகள் உருவானது என்பது குறித்த பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.
ஆய்வு முடிவு குறித்து கிளேட்டன் கூறியதாவது:

பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களோடு தொடர்பு கொள்ளவதற்குதான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் பலர் தங்களது முன்னாள் துணையின் நட்பை தொடரவும் அதிக அளவில் பேஸ்புக்கை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதனால் பலரும் தங்களது துணையின் பேஸ்புக்கை கண்காணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களிடையே உள்ள நம்பகத்தன்மையை குறைப்பதோடு, பழைய நட்பு குறித்த சர்ச்சைக்கும் காரணமாகிறது. இதனால் தற்போதைய துணையை ஏமாற்றுவதற்கான வழிமுறைகளை எல்லாம் அவர்கள் கையாள்வது தெரியவந்தது. இது விவாகரத்தை நோக்கி இட்டு சென்றதாகவும் பலர் தெரிவித்தனர்.

காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் போன்ற புதிதாக இணைந்த ஜோடிகளிடம்தான் இந்த பாதிப்பு அதிகம் இருந்தது. அதாவது உறவு பலப்படாத நிலையில், ஒருவருக்கு ஒருவர்  சந்தேகம் கொள்வது அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிக பேஸ்புக் பயன்பாடு, உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால், காதலர்கள் மற்றும் புதுமண தம்பதியினர் பேஸ்புக்கில் நேரத்தை செலவிடுவதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கிளேட்டன் கூறினார்.

No comments:

Post a Comment