பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள சுதவான்பூர் பகுதியில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது.
அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீசந்த்ராயும் அவரது நண்பர்களும் மது அருந்தியபடி புத்தாண்டு கொண்டாடினார்கள்.
சுதவான்பூர் போலீசார் அவர்கள் அத்துமீறக் கூடாது என்று எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீசந்த்ராயையும் அவரது நண்பர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதனால் மது போதையில் இருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
வாக்குவாதம் முற்றியதால் ஸ்ரீசந்த்ராய் தன் சட்டையில் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து போலீசார் மீது சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ் அதிகாரி அனில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீஸ்காரர் ஒருவரின் மகனும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தான். அதன்பிறகு போதையில் இருந்த இளைஞர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்து உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment