பாலியல் பலாத்கார வழக்கில், 'குற்றவாளி' என நிரூபிக்கப்பட்ட ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். தன்னால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், தவறான நடத்தை கொண்டவர்... பலருடன் பாலியல் உறவில் ஈடுபட்டவர் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதை, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதன் முடிவில், ''பலாத்காரம் என்பது ஒரு பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றம் அல்ல. இந்த சமூகத்துக்கே எதிரான குற்றம். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின், தவறான நடத்தையை, தனக்கு சாதகமான ஆதாரமாக காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது. பெண்ணின் தவறான நடத்தை என்பது... பலாத்கார வழக்குக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். ஏனென்றால், தவறான நடத்தை கொண்ட பெண்ணுக்கும் வாழ்வுரிமை உள்ளது. அவர் ஒன்றும் பாலியல் வன்முறைக்கு பயன்படுத்தப்படும் பொருள் அல்ல.
பாலியல் வன்முறை என்பது மனிதத்தன்மையற்ற செயல் மட்டுமல்ல, அது பெண்ணின் அந்தரங்க உரிமையிலும், புனிதத்தன்மையிலும் சட்டவிரோதமாக குறுக்கிடும் செயல். அவரது கண்ணியத்தையும், சுயமரியாதையையும் குலைக்கும் செயல். அதிலும், பாதிக்கப்பட்ட பெண் ‘மைனர்’ ஆக இருப்பதால், அது அவருக்கு மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண்ணுக்கு உடலில் காயங்கள் ஏற்படுத்தியது மட்டுமின்றி, அவரது கண்ணியம், கற்பு, நற்பெயர், மரியாதை ஆகியவற்றில் மாறாத வடுவை குற்றவாளி ஏற்படுத்தி விட்டார். எனவே, இத்தகைய குற்ற வழக்குகளை கோர்ட்டுகள் கடுமையாக அணுக வேண்டும்'' என்று விளாசித் தள்ளியிருக்கின்றனர் இரு நீதிபதிகளும்!
No comments:
Post a Comment