மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பெண், மும்பை ஐகோர்ட்டில் போலீஸ் உயரதிகாரி பிரசாந்த் மர்டே என்பவர் மீது வழக்கு தொடுத்தார்.
பிரசாந்த் மர்டேயுடன் 14 ஆண்டு காலமாக கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளதாக குறிப்பிட்ட ராஜஸ்ரீ, தனக்கு தாலிகட்டி முறைப்படி மனைவியாக்கிக் கொள்ளும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டில் வாதிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி சார்பில் ஆஜரான வக்கீல், 'எனது கட்சிக்காரருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. எனவே, இந்து திருமண சட்டத்தின்படி ராஜஸ்ரீயை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்வது சாத்தியமற்றது.
எனது கட்சிக்காரருக்கு தொடர்ந்து ராஜஸ்ரீ தொல்லை கொடுத்து வருவதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறார்.
எனது கட்சிக்காரரின் வாழ்க்கையில் இனி ராஜஸ்ரீ தலையிடக்கூடாது என்று உத்தரவிடவேண்டும்' என வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி மோஹித் ஷா, நீதிபதி சாதனா ஜாதவ் ஆகியோர் 'ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழும் இந்து மதத்தை சேர்ந்த ஒரு நபரை இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதை இந்து திருமண சட்டம் அனுமதிக்கவில்லை.
எனவே, இவ்வழக்கில் மனுதாரருக்கு நிவாரணம் அளிக்க இயலாது' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்
No comments:
Post a Comment