சென்னை: மிக்சியில் மசாலா அரைத்துக் கொண்டிருந்த போது திடீரென மின்தடை ஏற்பட்டது. அதனால் அம்மியில் அரைத்துக் கொள்ளலாம் என்று மிக்சியில் இருந்து மசாலாவை வழித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் வந்ததால் ஆசிரியை ஒருவருக்கு விரல்கள் துண்டாகின.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ராபர்ட். சென்னையில் உள்ள தனியார் நிறுவன அலுவலர். அவரது மனைவி ஃபிளாரன்ஸ்(39). அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை. சில நாட்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு கிளம்பும் கணவருக்காகவும், பள்ளிக்கு செல்லும் தனக்கும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார். குழம்புக்கு தேவையான மசாலா பொருட்களை மிக்சியில் போட்டு அரைக்க ஆரம்பித்தார். அப்போது பார்த்து திடீர் மின்தடை ஏற்பட்டது. வேலைக்கு தயாராகும் நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதில் எரிச்சலான ஃபிளாரன்ஸ் மிக்சியில் இருந்த மசாலாவை எடுத்து அம்மியில் அரைக்க முடிவு செய்தார். அதற்காக மசாலாவை மிக்சியில் இருந்து வழித்து எடுத்த போது திடீரென மின்சாரம் வந்தது. அதனால் மிக்சி பிளேடுகள் சுழல ஆரம்பித்தன. அதில் மசாலாவை வழித்துக் கொண்டிருந்த ஃபிளாரன்ஸ் விரல்கள் பிளேடில் சிக்கி துண்டாகியது.
வலது கையில் உள்ள 4 விரல்களின் முனைகளும் துண்டான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சேதமடைந்த விரல் முனைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மின்தடை ஏற்பட்டதும் சுவிட்சை அணைக்காமல் மிக்சியை பயன்படுத்தியதால் பிரச்னை. எப்போது போகும் என்று தெரியாத மின்சாரம், மீண்டும் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் அப்பாவி பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே மின்தடை ஏற்பட்டதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மிக்சி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், கெய்சர், டிவி, ரேடியோ, வாஷிங் மெஷின் ஆகியவற்றை நிறுத்தி விடுவது நல்லது. இல்லாவிட்டால் பொருட்களுக்கு மட்டுமல்ல அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்து
No comments:
Post a Comment