பெங்களூர்: கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா நேற்று அளித்த பேட்டி:மகாராஷ்டிரா மாநிலத்தில் அமலில் உள்ள மாய, மந்திரங்களுக்கு எதிரான சட்டத்தைப்போல் ஒரு சட்டத்தை கர்நாடகாவிலும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. அறியாமை மற்றும் கஷ்டத்தில் இருப்பவர்களை குறிவைத்து மாய மந்திரங்கள் பெயரில் ஏமாற்று வேலை நடக்கிறது. மந்திரவாதிகள் ஒருகட்டத்தில் நரபலி கொடுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். அதுபோன்ற பல சம்பவங்கள் கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சில சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மாய, மந்திரங்களுக்கு கடிவாளம்போட புதிய சட்டம் அவசியப்படுகிறது. மகாராஷ்டிராவிலுள்ள சட்டத்தைவிடவும் வலுவான சட்டமாக இது இருக்கும். தேசிய சட்டப் பள்ளியின் சட்ட நிபுணர்களிடமும், கர்நாடக சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர்களிடமும் கருத்து கேட்டு, விரைவிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படும்.‘நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, கொடூர நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு, ஒழிப்பு சட்டம்& 2013’ என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்படும். ஜோதிடம் என்பது அறிவியலுடன் தொடர்புடையது. விண்வெளியில் கிரகங்கள் இருப்பதை வெளிநாட்டினர் கண்டு பிடிக்கும் முன்பே நமது ரிஷிகள் கண்டறிந்து அவற் றின் தன்மைக்கு ஏற்ப பெயர்களையும் சூட்டினர்.
அந்த அறிவியலை அடிப்படையாக வைத்து ஜோதி டம் பார்க்கப்படுகிறது. ஆனால், சமீப காலங்களில் ஜோதிடத் துறையிலும் போலிகள் புகுந்துவிட்டனர். ஜோதிடமே தெரியாமல் மக்களை ஏமாற்றுவதை அவர்கள் வாடிக்கை யாக வைத்துள்ளனர். குறிப்பாக, ஜோதிடம் பார்க்க வருவோரை பயமுறுத்தி, பரிகாரம் செய்வதாக கூறி பணம் பறிக்கிறார்கள். பெங்களூரிலுள்ள டாலர்ஸ் காலனி வீட்டில் குடியேறினால் உயிருக்கே ஆபத்து என்று ஒரு ஜோதிடர் என்னிடம் கூறினார். இதைக்கேட்ட எனது மனைவி அச்சமடைந்து, அந்த வீட்டுக்கு குடிபோக வேண்டாம் என்று கேட்டுக்கொண் டார். நான் அதை பொருட்படுத்தவில்லை. இப்போது, அந்த ஜோதிடர் எங்குள்ளார் என்பதே தெரியவில்லை.இந்த புதிய சட்டம், எந்த ஒரு தொழிலையும் குறிவைத்து கொண்டு வரப்படாது. மூட நம்பிக்கை களை பரப்புவது யாராக இருந்தாலும், அது எந்த வகையில் பரப்பப்பட்டாலும் நடவடிக்கை எடுப்பதுதான் இதன் நோக்கம். மூட நம்பிக்கைகளை பரப்புவோருக்கு தொலைக்காட்சிகள் வாய்ப்பளித்தால், அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எது மூட நம்பிக்கை, எது நம்பிக்கை என்பது குறித்த வரையறை, அரசு கொண்டுவரும் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கும் என்றார்.
No comments:
Post a Comment